கண்ணதாசன் பாடல்கள்
கந்தல் துணி
கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியை போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு!!
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணை போலே –அந்த
கரிசல் கழனிமேலே –அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே –அந்த
வண்ணச் செடியின் மேலே!
பருத்தியெடுத்து கொட்டை பிரித்ததும்
பஞ்சுக் குவியலாச்சு - “மில்”லை
பார்க்க பயணம் போச்சு - அதை
திருத்தி யெடுத்து பார்க்கும் போது
சின்ன இழைக ளாச்சு - நூல்
என்னும் பெயருண் டாச்சு!
அழகு வண்ணம் கலந்து நெய்ததில்
ஆடை வந்தது மெல்ல - பலர்
மானம் காத்துக் கொள்ள - இடை
குழையும் மாதர் உடலி லேறிக்
கோலக் கவிதை சொல்ல - உடல்
மூடி அணைத்துக் கொள்ள!
அந்த துணியில் ஒன்று கிழிந்து
அடுப்பங் கரைக்கு வந்து - தான்
படிக்கு திந்தச் சிந்து - தன்
சொந்தக்காரர் பலரை எண்ணி
துடிக்குது மனம் வெந்து - கதை
சொல்லுது தன்னை நொந்து!
வாழும்நாளில் வாழ்ந்த என்னை
வைத்த இரும்பு பெட்டி - இன்று
உதைக்கும் என்னை எட்டி - நிலை
தாழ்ந்துபோது மனிதர் கூட
உடைந்த பானை சட்டி - யார்
உறவு கொள்வார் ஒட்டி?
என்னை ஒருத்தி இடையி லேற்றி
இருந்த காலம் உண்டு - அவன்
மணந்த கணவன் கண்டு - அவள்
கன்னத்தோடு என்னை சேர்த்து
கலந்த காலம் உண்டு - அது
இறந்த காலம் இன்று!
சலவை செய்து வாசம் போட்டு
தங்கம் போல எடுத்து- பின்
அங்கம் பொலிய உடுத்து- தன்
நிலைமை மாறிக் கிழிந்த பின்பு
நிலத்தில் என்னை விடுத்து- சென்றார்
நீண்ட கதை முடித்து!
சுட்ட சோற்று பானை சட்டி
தூக்கி இறக்க வந்தேன்-என்
தூய உடலை தந்தேன்- நிலை
கெட்டு போன செல்வர் போல
கேள்வியின்றி நின்றேன் –இன்று
கேலி வாழ்க்கை கண்டேன்!
பந்தல் போட்டு மணம் முடித்த
பருவ உடலில் துள்ளி –வாழ்ந்த
பழைய கதையை சொல்லி –ஏங்கும்
கந்தல் கதையை கேட்ட பின்பும்
காலம் அறிந்து கொள்வீர்! –வாழ்வை
காவல் காத்து கொள்வீர்!’
மேனி அழகும் காசு பணமும்
இருக்கும் வரைக்கும் லாபம் – அதை
இழந்துவிட்டால் பாபம்! –பின்
ஞானி போல பாடவேண்டும்
நாய்களுக்கும் கோபம் – அதுதான்
நான் படிக்கும் சோகம்!!
கந்தலுக்கும் வாழ்வு வரும்
காலம் ஒன்று உண்டு - ஒரு
கையளவு துண்டு - மேனி
பந்தல் தன்னை மூடிக் கொள்ள
வேண்டும் வேண்டும் என்று - ஏழை
வேண்டி நிற்பான் அன்று!!
கோவணமாய் ஆன போதும்
கொள்கை எனக் குண்டு - மானக்
கோட்டை காப்ப தென்று - இன்று
கேவலமாய் ஆன போதும்
கேள்விக்குறி ஒன்று! - பதில்
கேட்கிறது நின்று!!
- கண்ணதாசன்